மாநபியும் மனித நேயமும்
இன்றைய உலகில் எங்கும் “
என்றும் “ எப்பொழுதும் “மொழியப்படும் வார்த்தை “ இஸ்லாம் “ இஸ்லாம் “ என்பதுதான்
என்று கூறினால் அது மிகையல்ல. அந்தளவு உலகம் முழுவதும் விரிந்து பறந்து காணப்படுகிறது.
ஆனால் இந்த தீனுல்
இஸ்லாமை மாநபி (ஸல்) அவர்கள் மக்களிடம் எடுத்து சென்று அதன் பால் அவர்களை அழைத்தபோது
மிகப்பெரிய எதிர்ப்புகளும், சோதனைகளும் புயலன கிளம்பியது .
இருந்தும் நபியின் சொல்லில்
உள்ள ஆழமான கருத்துகளும், அதில் பொதிந்திருந்த மனித நேயமும் அநீதியிலிருந்தும்,
அடிமைத்தனத்திலிருந்தும் விடுபடவேண்டும் என்று ஏங்கிய உள்ளங்களுக்கு வரப்பிரசாதமாக
அமைந்தது. ஆகவே ஓடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
பொதுவாக ஓடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு யார் குரல் கொடுத்தாலும் ஓடுக்கியவர்களின்
எதிர்ப்புக்கும், கோபத்திற்கும் ஆளாக வேண்டி வரும்.
இவ்வாறுதான் முஹம்மது
நபி (ஸல் ) அவர்கள் இஸ்லாம் என்ற சுதந்திர காற்றை வெளிப்படுத்திய போது அந்த மக்கள்
எதிர்ப்பை காட்டினார்கள். ஆனாலும் நபியின் உயர்ந்த, சிறந்த பண்பை பாராட்டினார்கள்.
மதித்தார்கள். உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற பட்டத்தை வழங்கி புகழ்ந்தார்கள்,
வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் அந்த மக்களின்
மனிதாபிமானமில்லாத, கரடு முறடான கொள்கைகளையும், மனித நேயமற்ற செயலையும் கண்டு
வருந்தினார்கள். அவற்றை களைவதைப்பற்றி சிந்தித்து, அதற்காக கடும் முயற்ச்சி செய்து
அதில் வெற்றியும் பெற்றார்கள்.
ஆம் இனவெறியும்,
மொழிவெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் மனதில் மனிதர்கள் அனைவரும் ஒரே
குடும்பம், ஒரே சமூகம் என்ற மாபெரும் சித்தாந்தத்தை ஆழமாக பதிய வைத்தார்கள்.
அருள் மறை அல்கு ர்ஆனின்
வசனமாகிய, மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான்
படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும்,
கோத்திரங்களாகவும், ஆக்கினோம் (அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல )
அல் குர்ஆண் 4:13 என்ற வசனத்தின்
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
மா நபியின் மனித நேயத்தை
வரலாறு நெடிய நாம் காணலாம் .
ஹாரிஸா என்பவரின் மகன்
ஜைத் என்ற சிறுவர் மக்காவின் அடிமைச்சந்தையில் ஏலம் விடப்பட்டார். அவரை விலைகொடுத்து வாங்கி தனது அருமை கணவர்
அன்பு நபி (ஸல் ) அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்கள் அன்னை கதீஜா அம்மையார். அவரை
பெற்றுக்கொண்டு தனது பணிவிடைக்கு அமர்த்திக்கொண்டார்கள் பூமான் நபி (ஸல் )
அவர்கள்.
அடிமைதானே என்று
ஏளனத்துடன் பார்க்காமல், உதாசீனம் செய்யாமல் தனது வளர்ப்பு மகனாகவே ஆக்கி
கொண்டார்கள் அண்ணல் பெருமானார் (ஸல் ) அவர்கள்.
ஜைதும் பண்பு நபிக்கு பணிவிடை
செய்வதில் பரவசமடைந்தார். நபியின் மீது அளவு கடந்த பாசமுடன் நடந்து கொண்டார். இந்
நிலையில் காணாமல் போன தன் மகன் மக்காவில்
இருப்பதை அறிந்த அவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து மக்காவிற்கு புறப்பட்டு
வந்து , நபி (ஸல் ) அவர்களை சந்தித்து தனது திருப்பி கொடுத்து விடுங்கள்
உங்களுக்கு வேண்டிய பொருளை தருகிறோம் என்று கூறினார்கள்.
அவர்களின் வேண்டுதலை
பொறுமையுடன் செவி மடுத்திய நேச நபி (ஸல் ) அவர்கள் இவர் உங்கள் பிள்ளை, உங்களுக்கு
சொந்தமானவர், நீங்கள் விரும்பி, அவரும் விரும்பினால் தாராளமாக அழைத்துச்செல்லலாம்.அதற்கு
எந்த தொகையும், பொருளும் எனக்கு கொடுக்கத்தேவையில்லை என்றார்கள் .
இந்த மனித நேயத்தை மனதார
பாராட்டி, புகழ்ந்து மகிழ்ச்சியாக தன் மகனிடம் வந்து நீர் புறப்படு, நபி (ஸல் )
அவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்றார்கள். அதற்கு ஜைத் தனது பெற்றோர்களிடம்
உங்களை நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். ஆனால் முஹம்மது நபி (ஸல் ) அவர்களை
பிரிந்து என்னால் ஒரு நொடிப்பொழுதும் இருக்க முடியாது.தங்களுடன் வர முடியாத
நிலைக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டார் .
அருமையானவர்களே ! தங்களின்
பெற்றோர்களை பல காலம் பிறிந்து வாழ்ந்த மகன், அந்த பெற்றோர்களை சந்தித்த பிறகும்
உடன்செல்ல மறுத்து விடுகிறார் . காரணம் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அடிமை என்ற
அடைமொழியோடு வந்த இவரை உயர்ந்த கோத்திரம், சிறந்த வமிஷம், மகத்தான அந்தஸ்த்துடன்
இருந்த நபி (ஸல் ) அவர்கள் ஜைத்திடம் மாபெரும் மனித நேயத்துடன் நடந்துகொண்ட விதம்
அவரை இந் நிலைக்கு மாற்றியது.
அவ்வாறே நபியவர்களிடம்
வேலை செய்து வந்த ஒரு யூதச்சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது
அச்சிறுவனின் இருப்பிடத்தை தேடிச்சென்று நலம் விசாரித்தார்கள்.
ஒரு போரிலிருந்து
திரும்பும் சமயம் வழியில் ஒரு யூதப்பெண் அண்ணார் அவர்களுக்கு விருந்துண்ண அழைத்தபோது
மா நபியவர்கள் அவ்வழைப்பை ஏற்று விருந்துண்ண சென்றார்கள்.
ஒரு முறை நபி (ஸல் )
அவர்களின் உற்றத்தோழர் அபூபக்கர் (ரலி ) அவர்களுக்கும்,பனூஹாஸ் என்ற யூதனுக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் பிரச்சனை முற்றி யூதரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து
விட்டார்கள் அபூபக்கர் (ரலி ) அவர்கள். இப்பிரச்சனைக்கு தீர்வை காண நீத நபியின் தர்பாருக்கே சென்றார்கள் அந்த
யூதர்கள்.
அன்பானவர்களே ! அக்காலத்தில்
முஸ்லீம்களுக்கு பரமவிரோதியாக இருந்த யூதர்களின் சிறுவனை நோய்விசாரிக்க சென்றது,
அவர்களின் விருந்து அழைப்பை ஏற்றுக்கொண்டது, தன்னை நாடிவந்தவர்கள் யாராக
இருந்தாலும், எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை அரவணைப்பது நபியின் மனித
நேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
எனவே நாமும் அவர்களை
புகழ்வதோடு மட்டும் போதுமாக்கி கொள்ளாமல் உன்னத நபியின் உயர்ந்த பண்புகளுக்கு செயல்
வடிவம் கொடுத்து மாநபியைப்போல் மனித நேயத்துடன் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்
. மகத்தான சமுதாயத்தை உருவாக்குவோம்.:
###வபில்லாஹித்தவ்பீக் வல் ஹிதாயா###
::::வஸ்ஸலாம்::::
No comments:
Post a Comment