பைத்துல்லாஹ் தோன்றிய வரலாறு
இறையருளால் இக்காலத்தில்
எங்கும் இறையில்லங்கள் நிரம்பியுள்ளன . முஸ்லிம்கள் இறைவனை
தொழிதிட அவை நன்கு
பயன்படுத்தப்பட்டு வருகின்றன . இது இந்த சமுதாயத்திற்கு மட்டுமே அல்லாஹ் அருளிய
பேருபகாரமாகும்.காரணம் முந்திய சமுதாயத்தினர் குறிப்பிட்ட இடத்தில்தான் வணக்கம்
செய்திட வேண்டும். ஆனால் பூமி முழுவதும் தொழுமிடமாகவும் சுத்தமான பகுதியாகவும்
இச்சமுதாயத்திற்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ளான்.
ஆனால் உலகில் வாழும்
முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுருந்து தொழுதாலும் அவர்கள் முன்னோக்குவது
உலகில் முதன்முதலாக எழுப்பப் பட்ட இறையில்லம் “ கஅபாவை “ தான்.
இந்த பைத்துல்லாஹ்
உலகம்உருவாக்கப்படுவதற்கு சுமார் 2000, ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட ஓர் இறையில்லம். இந்த செய்தியை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் மாணவர்களிடம் கூறிய போது உலகமே உருவாக்கப்படவில்லை.
அந்த சூழ்நிலையில் கஅபா எப்படி இருந்திருக்க முடியும்?என்ற கேள்வி அவர்களுக்கு
முன் எழுப்பப்பட்ட போது அவர்கள் இப்படி பதில் கூறினார்கள். அல்லாஹுத்தஆலா உலகை
உருவாக்குவதற்கு முன்பு முழு உலகையும் தண்ணீரால் நிரப்பியிருந்தான். அல்லாஹ்வின்
அர்ஷும் தண்ணீரின் மீதே அமைந்திருந்தது என்பது நபிமொழி. அந்நேரத்தில் ஓர் இடத்தில்
மட்டும் நுரை வட்டமாக இருந்தது. அந்த இடத்தில் இரு மலக்குகளை ஏற்படுத்தி தன்னை
வணங்கி வரும்படி இறைவன் கட்டளை பிறப்பித்திருந்தான். அம்மலக்குகளும், சுமார்
இரண்டாயிரம் வருடங்கள் அவ்விடத்திலேயே அமர்ந்து அல்லாஹ்வை வணங்கி வந்தனர்.
இறைவன், தன் வல்லமையை
வெளிப்படுத்த எண்ணி இவ்வுலகை உருவாக்க நாடியபோது இந்த நுரை அமைந்த
பகுதியிலிருந்துதான் உலகின் உருவாக்கத்தை இறைவன் ஏற்படுத்தினான். அந்த இடம் தான்
புனித கஅபா இருக்கும் பகுதி. எனவேதான் பூமியின் மத்திய பகுதியில் கஅபா
அமைந்துள்ளது. அதன்பிறகு சுவனத்திலிருந்து ஒரு கூடாரத்தை மலக்குமார்கள்
கொண்டுவந்து அவ்விடத்தில் வைத்து இறை வணக்கத்தில் ஈடுபட்டனர்.
எப்பொழுதும் முதல்
மனிதர் பாவா ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்தார்களோ அப்பொழுது அவர்களுக்கு இக்கூடாரத்தை
மலக்குமார்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதை தொடர்ந்து ஆதம் (அலை) அவர்களும்
தனக்கு தோதுவாக அக்கூடாரத்தை மாற்றி அமைத்து இறைவணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
ஹஜ்ரத் ஆதம் (அலை)
அவர்களின் மரணத்திற்குப் பின் வாணிற்கு உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால்
அக்கூடாரத்தைச் சுற்றி அமைத்த சூழல் அப்படியே இருந்தது. அதன்பிறகு ஆதம் (அலை )
அவர்களின் மகனார் ஷீத் (அலை ) அவர்கள் இந்த கஅ பாவில் சிறிது மாற்றம் செய்து கட்டி
முடித்தார்கள். இவர்களின் வழித்தோன்றலில் நபி நூஹ் (அலை) அவர்கள் வந்தார்கள்.
இவர்களின் காலத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு உலகமே
தண்ணீரால் அழிந்த போது இந்த கஅபாவின் அடிச்சுவடு மட்டுமே அப்படியேயிருந்தது.
இந்த அடையாளச் சுவடை
வைத்துதான் நபி இப்ராஹீம் (அலை ) அவர்களுக்கு
“கஅ பா வை கட்டுங்கள் “என்ற கட்டளையை இறைவன் பிறப்பித்தான். இந்நிகழ்வு
மட்டுமே அல்குர்ஆணின் 2:127 என்ற வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே உலக மக்களின்
முழுப்பார்வையையும், தன் பக்கம் ஈர்த்த இந்த கஅபாவை நிர்மானித்தவர்களை வரிசையாக
பார்ப்போம்.
முதலாவது! மலக்குகளின்
மூலமாக அமைக்கப்பட்டது .
இரண்டாவது ! நபி ஆதம் (அலை
) அவர்கள் .
மூன்றாவது ! நபி ஷீத்
(அலை) அவர்கள் .
நான்காவது ! நபி
இப்ராஹீம் (அலை ) அவர்கள் .
ஐந்தாவது ! அமாலிக்கா
என்ற சமூகத்தினர் .
ஆறாவது !ஜுரும் என்ற
சமூகத்தினர் .
ஏழாவது! குஷை இப்னு
கிலாப் அவர்கள் .
எட்டாவது ! குரைஷி
கூட்டத்தினர் .
ஒன்பதாவது ! அப்துல்லா இப்னு
ஜுபைர் (ரலி ) அவர்கள் .
பத்தாவது ! ஹஜ்ஜாஜ்
இப்னு யூசுப் என்பவர் .
பின் குறிப்பு : குறைஷியர்கள் காலத்தில்
கஅபா வின் சுவர்கள் பலகீனமானதால் அதை புதிதாக நிர்மாணம் செய்ய மக்களிடம்
முழுக்க முழுக்க ஹலாலான நிதியை வசூல் செய்து இந்த கஅபாவை நிர்மானித்தார்கள். ஆனால் அவர்கள்
திரட்டிய நிதி முழு கஅபாவையும் நிர்மாணம் செய்ய போதுமானதாக இருக்கவில்லை. எனவே
பகுதியை அப்படியே விட்டுவிட்டு மீதமானதை கட்டி முடித்துவிட்டார்கள். விடப்பட்ட
பகுதிக்குத்தான் ஹதீம் என்று சொல்கிறோம் . இதுவும் கஅபாவின் ஒரு பகுதியாகவே
கணிக்கப்படும். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில் நபி (ஸல் ) அவர்களின் வயது முப்பத்தி ஐந்தாக இருந்தது .
பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி ) அவர்கள் மக்காவின் கவர்னராக இருந்தபோது
புனித கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்கள் ஏர்படுத்திய அமைப்பில் கஅபாவின் எந்தபகுதியும் விடப்படாமல் முழுமையாக கட்டினார்கள் . அதன் பிறகு ஹஜ்ஜாஜ்
இப்னு யூசுப் என்பவர் மக்காவின் கவர்னராக
பொருப் பேற்றப்பின் குறைஷியர்கள் எவ்வமைப்பில் புனித கஅபாவை அமைத்தார்களோ அவ்வாறே
இவரும் கஅபா வின் ஒரு பகுதியை விட்டுவிட்டு மீத முள்ளதை கட்டினார்கள் . பனூ
அப்பாஸிய்யாக்களின் ஆட்சியாளர் ஹாரூன்
ரஷீத் அவர்கள் இமாம் மாலிக் (ரஹ் )
அவர்களிடம் தாங்கள் அனுமதித்தால் இந்த
கஅபாவை நபி இப்ராஹீம் (அலை ) அவர்களும் , அதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு
ஜுபைர் (ரலி) அவர்களும் எந்த அமைப்பில் கட்டினார்களோ
அதே அமைப்பில் நான் அமைக்கிறேன் என்று
கோரிய போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தடுத்து விட்டார்கள் . காரணம் அரசர்கள்
மாறிக்கொண்டே இருப்பார்கள் . அதனால் கஅபாவின்
அமைப்பும் மாறிக்கொண்டே யிருக்கும். பிறகு அதன் புனிதத் தன்மையில் குறைவு வந்து விடக்கூடாது என்று தடுத்து
விட்டார்கள் .
முடிவில் சில வரிகள் :
உலகில் தோன்றிய முதல் இறை இல்லம் கஅபா உட்பட அனைத்து
மஸ்ஜிதுகளின் நிர்வாகத்தினர்கள் அனைவரையும்
அல்லாஹ்வே தேர்ந்துதெடுத்து அறிமுகம் செய்து
விட்டான் . அவர்களை தேடிக் கண்டுபிடித்து மஸ்ஜிதுகளின் பொறுப்பாளியாக நியமிப்பதுதான் முஸ்லிம்களின் கடமையாகும் . இறைவன் தேர்வு செய்த
மஸ்ஜிதுகளின் நிர்வாகத்தினர்கள் யார் ?
இதோ !
அல்லாஹ்வின் மஸ்ஜித்களை
பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் , அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும்
ஈமான் கொண்டு தொழுகையை கடைபிடித்து ஜக்காத்தை (முறையாகக் ) கொடுத்து அல்லாஹ்வை தவிர
வேறெதற்கும் அஞ்சாதவர்கள் தாம். இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி
பெற்றவர்கள் ஆவார்கள் .( அல் குர்ஆன் 9:18).
வஸ்ஸலாம்
MAASHA ALLAH ARUMAYANA NARSEITHI THANTHA MOULANA AVARKALUKKU ALLAH BARAKATH SEIVANAHA......AMEEN..
ReplyDelete