Thursday, 10 May 2012

குடும்ப வாழ்க்கை வளம் பெற


குடும்ப வாழ்க்கை வளம் பெற வள்ளல் நபி வாழ்ந்து காட்டிய வழிமுறைகள்.:
(நபியே) நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வுக்கும் (அவனின்) தூதருக்கும் வழிப்படுங்கள். ( வழிபடுவதை ) அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 3 : 32 )
யார் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவிகளிடம் சிறந்தவனாக இருக்கிறேன். (நபி மொழி,நூல் புகாரி.) வெளியே சிறந்தவர்களாக, தலைவர்களாக வலம் வரும் எத்தனையோ நபர்களைப்பற்றி அவர்களின் மனைவியிடத்தில் கேட்டால் தெரியும் அவர் எப்படிபட்டவர் என்று.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ சாதனை மனிதர்களும், பிரபலங்களும் தங்களின் குடும்ப வாழ்வில் தோற்றுப்போன சம்பவங்கள் நிறையவுள்ளன. ஒரு மனைவியை வைத்து ஒழுங்காக வாழ்க்கை நடத்த முடியாதவர்கள் பல மனைவிகளுடன் பண்புடன் வாழ்ந்த வள்ளல் நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையை எண்ணி பார்க்க வேண்டாமா?.
இன்றைய காலத்தில் குடும்ப நலன் குலைந்து போக காரணம் என்ன? ஒரு ஆணாகிறவன் “ மகனாக, கணவனாக, தந்தையாக செய்ய வேண்டிய கடமைகளை எந்த அளவு சரியாக நிறைவேற்றுகிறான். இதில் மனைவியே கதியென்று நினைத்து தாயை விரட்டுபவர்களும், தாயுடன் சேர்ந்து கொண்டு மனைவியை நோவினை செய்பவர்களும் குடும்ப நலனை எப்படி பேண முடியும்.
சதாவும் மனைவியை ஏசி, பேசிக்கொண்டும், குறை கூறிக்கொண்டும், திருப்தி கொள்ளாத ஆண்வர்க்கம் ஒரு புறம். மனைவிக்கு முற்றிலும் அடிபணிந்து அடிமையாகி தன் பெற்றோர் முதல் உறவினர் வரை அனைவரையும் உதாசினப்படுத்தி மனைவியே மந்திரி என்ற மந்திரத்தில் கட்டுண்டவர்களைபோல உள்ள ஆண்கள் மறுபுறம்.
இவர்களுக்கு மாநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் என்ன என்பதை பார்ப்போம். மகனுக்கு: பெற்றோரை பேணவேண்டும், மதிக்கவேண்டும் தாயின் காலடியில் தான் சுவனம். தந்தைதான் சுவனத்தின் திறவுகோல். என்ற பாச நபியின் பண்பு மொழி.
கணவனுக்கு: கணவனின் (ஆணின்) விலா எழும்பிலிருந்து படைக்கப்பட்டவள் மனைவி. அவளிடம் குறை கண்டால் மிருதுவாக திருத்துங்கள். வேகமாக வழைத்தால் (கடுமையான முறையைகையாண்டால்) அது முறிந்து விடும். என்பது அருமை நபியின் அன்பு மொழி.
அதே நேரத்தில் பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள்தான்.(அல் குர்ஆன் 4 :34) என்ற ஆயத்தை மறந்து மனைவிக்கு அடிமையாகவும் ஆகி விடக்கூடாது.
தந்தைக்கு: பிள்ளைகளுக்கு மார்க்க விஷயங்களை (பர்ழு அய்ன் உட்பட முக்கிய விடயங்களை) கற்றுக்கொடுத்து நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக அவர்களை வளர்த்து ஆளாக்கி, உரிய பருவம் வந்தவுடன் அவர்களுக்கு பொருத்தமான ஜோடியை பார்த்து நிக்காஹ் செய்து வைப்பது தந்தையின் கடமை.
இன்று பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்யும்போது பாசத்தின் காரணமாக அவர்களை கண்டிக்காமல் விட்டு விடுகின்றனர். இதுவும் தவறு.குடும்பத்தினரிடம் அன்புடனும் அதே சமயம் கடமை தவறும் போது கண்டிப்புடனும் நடந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மாநபி (ஸல் ) அவர்கள் காட்டிய வழியில் சரியாக செய்யும்போது அவர்களின் நலன் பேணப்பட்டு வாழ்க்கை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்.
குறைகளை ஆராய்வீர் ! தன் கணவனை பற்றி மகள் குறை கூறினால் பல தந்தைமார்களுக்கு மருமகன் மீது ஆத்திரம் பொங்கும். பல குடும்பங்களில் மணவிலக்கு ஏற்படுவதற்கு கணவன், மனைவியை விட அவர்களின் குடும்பத்தினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிறு விஷயத்தைக்கூட  ஊதி பெரிதாக்கி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றனர்.
அன்னை பாத்திமா (ரலி) அவர்களுக்கும், அலி (ரலி) அவர்களுக்கும் ஒரு முறை மனஸ்தாபம் ஏற்பட்டு அதை தன் தந்தையிடம் முறையிட்டார்கள் அருமை மகள் பாத்திமா அவர்கள். தன் மருமகனார் அலி (ரலி) அவர்களை அழைத்து என் மகள் பாத்திமாவை வருந்தச்செய்வது என்னை வருந்தச்செய்வது போன்று என்றார்கள். உடனே அலி (ரலி) கோபத்தை மறந்து நல்ல முறையில் நடந்தார்கள் என்பது சரித்திரத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம். இங்கு நபியவர்கள் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அன்பாகவும், மிருதுவாகவும் பேசினார்கள். இத்தகைய பண்பை ஒவ்வொரு பெற்றோரும் பேணி நடந்தால் மகளின் வாழ்க்கை மட்டுமல்ல அனைவரின் குடும்ப நலனும் சிறந்து விளங்கும்.வாழ்க்கையிலும் மணம் வீசும், மகிழ்ச்சி பொங்கும்.
முடிவில் சில வரிகள் ! நமது குடும்ப வாழ்வு சிறப்பாக அமைய, வளம்பெற, மகிழ்ச்சி கரைபுரண்டோட வேண்டுமானால் ஒரே வழி நம்முடைய வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழி முறைகளை பின்பற்றுவதில்தான் இருக்கிறது.எனவே “இறைவழி நபிவழி “ நபி வழி நம் வழி “ என்று நாமும் நபியின் வழி முறைகளை பின் பற்றி நமது குடும்பத்தின ரையும் பின் பற்றி வாழ்ச்செய்வோமாக ஆமீன் .ஆமீன் .ஆமீன் . வபில்லா ஹித்தவ்பீக் வல் ஹிதாயா.வமா அலைனா இல்லல் பலாக்ஹுல் முபீன்.
                                           வஸ்ஸலாம்


No comments:

Post a Comment